முன்னே போனால் கடிக்கும், பின்னே போனால் உதைக்கும்!
ஊருக்கு அருகே சிறு குன்று; குன்றின் அடிவாரத்தில் ஒரு கோவில்.
காலையிலும் மாலையிலும் கோவிலில் கூட்டம் இருக்கும்; மற்ற நேரங்களில் அவ்வப்போது ஓரிருவர் வந்துபோவார்கள். பொதுவாக அந்தக் கோவிலிலும் சுற்றுப்புரத்திலும் அமைதியான சூழ்நிலையே எப்போதும் நிலவும்.
அங்குத் துறவி ஒருவர் இருந்தார். எப்போதும் கோவில் மண்டபத்தில் அமர்ந்திருப்பார்; இரவில் அங்கேயே படுத்துக்கொள்வார்.
எப்போது அவர் அந்த ஊருக்கு வந்தார் என்று யாருக்கும் சரியாக நினைவில்லை; எங்கிருந்து வந்தார் என்று யாருக்கும் தெரியாது. முதிர்ந்த அகவையைக் காட்டும் தோற்றம்; ஏறத்தாழ அறுபது ஆண்டுகளைத் தாண்டி இருப்பார் என்று ஊர்மக்கள் ஊகித்தார்கள்.
எப்போதும் அமைதியாகவே இருப்பார்; யாரிடமும் பேசுவதில்லை. பேசவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஓரிரு சொற்கள் பேசுவார்; பேசியவுடன் மீண்டும் அமைதியாகி விடுவார்.
ஒரு நாள் அந்தக் கோவிலுக்குப் புதிய துறவி ஒருவர் வந்தார்.
மண்டபத்தில் அமர்ந்திருந்த முதிய துறவியை வணங்கினார்.
“சுவாமி, நான் தொலைவிலிருந்து வருகிறேன்; இங்குத் தங்கிக்கொள்ளலாமா?” என்று கேட்டார்.
உடன்பாட்டுக்கு அடையாளமாகத் தலையை அசைத்தார் முதிய துறவி.
அன்றிலிருந்து அந்த இளந்துறவிக்கும் கோவில் மண்டபமே இருப்பிடம் ஆகியது.
சில திங்கள் கழிந்தன.
தம் வழக்கத்துக்கு மாறாக ஒரு நாள் இளையவரிடம் பேசத் தொடங்கினார் முதியவர்.
“நீங்கள் ஏன் துறவி ஆனீர்கள்?” என்று கேட்டார்.
“வாழ்க்கையே வெறுத்துவிட்டது, சுவாமி! திருமணம் செய்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தேன்; முடியவில்லை. எல்லா முயற்சிகளும் வீணாகி விட்டன. ஒவ்வொரு முறையும் என்ன என்னவோ தடைகள்! எவ்வளவு காலம்தான் முயற்சி செய்வது? வெறுத்துவிட்டது. எனக்கு மனைவி மக்கள் யாரும் இல்லை; அதனால்தான் துறவியானேன். மனைவி மக்கள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? ஆமாம், தாங்கள் துறவி ஆனது ஏன் சுவாமி?” என்று கேட்டார் இளையவர்.
“எனக்கு மனைவி மக்கள் இருந்தார்கள்; அதனால்தான்!” என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் அமைதியானார் முதிய துறவி.
(வளமை – 02.10.2009)
- அ. நம்பி
சிந்திக்க வைக்கிற கதை.
எட்வர்ட் டி போனோவின் சிக்ஸ் ஹாட்ஸ் தின்கிங்ற்கு டெமோ மாதிரி இருக்கிறது!
http://kgjawarlal.wordpress.com
அன்பருக்கு,
//சிந்திக்க வைக்கிற கதை.
எட்வர்ட் டி போனோவின் சிக்ஸ் ஹாட்ஸ் தின்கிங்ற்கு டெமோ மாதிரி இருக்கிறது!//
அப்படியா? நீங்கள் சொன்னால் சரிதான் ஐயா.
enakku nirayya manaivikal endru solli irukkaventum
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//enakku nirayya manaivikal endru solli irukkaventum//
அது மிகுந்த ஆபத்தாயிற்றே ஐயா!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
erandum onruthan thuravu enpadu ninaiththdu kedaikkamal povadu
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//erandum onruthan thuravu enpadu ninaiththdu kedaikkamal povadu??//
துறவு என்றாலே அப்படித்தான் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட முடியாது ஐயா; ஆனால் அப்படியும் இருக்கக்கூடும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.