கடற்கரையில் ஒரு தேவதை…!

2009 November 5

pb01

காலை நேரம்; கடற்கரை; பெரியவர் ஒருவர் ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருந்தார்.

மின்னல்போல் ஓர் ஒளி தோன்றியது; ஒளியில் பெண்ணுருவம் ஒன்று தோன்றியது.

“யார் நீ?” என்று கேட்டார் பெரியவர்.

“நான் தேவதை!” என்று இனிய குரலில் மறுமொழி வந்தது.

“தேவதையா? எங்கு வந்தாய்?”

“உங்களுக்கு வரம் கொடுக்கவந்தேன்!”

“வரமா? நான் கேட்கவில்லையே?”

“தேவதை என்றால் வரம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்; கேளுங்கள்!”

“எத்தனை வரங்கள் தருவாய்?”

“நீங்கள் கதைகளே படித்ததில்லையா? மூன்று வரங்கள் கேட்கலாம்!”

“என்ன கேட்டாலும் தருவாயா?”

“தருவேன்; ஆனால் ஒரு நிபந்தனை; என்னால் அறவே முடியாதனவற்றைக் கேட்டால் மறைந்துவிடுவேன்!”

பெரியவருக்கு நம்பிக்கை இல்லை. `யாரோ பெண்ணொருத்தி விளையாட்டாக ஏதோ சொல்கிறாள்’ என்று நினைத்தார்.

“இந்த மணலைக் கயிறாகத் திரிக்கவேண்டும்” என்றார்.

“அப்படியே ஆகட்டும்” என்றது தேவதை.

மறுகணம் கயிறாகிவிட்டது கடற்கரை மணல்.

பெரியவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

`ஏதோ கண்கட்டு வித்தை செய்கிறாள்; நாமும் சீண்டிப் பார்ப்போமே’ என்று நினைத்தார்.

“கிழக்கே எழும் ஞாயிறு மேற்கே எழவேண்டும்” என்று சொல்லிச் சிரித்தார்.

“அப்படியே ஆகட்டும்” என்றது தேவதை.

கிழக்கில் இருந்த ஞாயிறு உடனே இடம்மாறி மேற்கில் நின்றுகொண்டது.

பெரியவர் திகைத்துப்போனார்.

முன்னால் நிற்பது உண்மையில் தேவதைதான் என்று உணர்ந்துகொண்டார்.

தேவதையின் ஆற்றலைப் புரிந்துகொண்டார்.

இரண்டு வரங்களை வீணாக்கியமைக்கு வருந்தினார்.

`இன்னும் ஒரே ஒரு வரம்! என்ன கேட்பது?’

சிந்தித்தார்.

`தன்னல விழைவு நன்றன்று; பொதுநல விழைவே நன்று’ என முடிவெடுத்தார்.

“இந்த நாட்டில் என் சமுதாயம் என்றும் ஒற்றுமையாக வாழவேண்டும்” என்றார்.

தேவதை மறைந்துவிட்டது.

- அ. நம்பி

(நனவுகள் – 29.09.2008)

9 Responses leave one →
  1. 2009 November 5
    தமி்ழ்வாணன் permalink

    ந‌ம‌க்கு நாமே ந‌ம் ச‌முதாய‌ம் ஒற்றுமையின்றி உள்ள‌து என்று கூறிக்கொண்டால் எதாவ‌து ப‌ய‌ன் உண்டா? எந்த‌ ச‌முதாய‌ம் தான் எல்லா நேர‌த்திலும் எல்லா சூழ்நிலையிலும் ஒற்றுமையுட‌ன் இருந்துள்ள‌ன? ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நாமும் பல‌ விச‌ய‌ங்க‌ளில் ஒற்றுமையுட‌ன் இருந்திருகிறோம்.

  2. 2009 November 5

    வாய்விட்டு சிரித்தேன் அய்யா. வாழ்த்துக்கள்.

  3. 2009 November 5

    அன்பருக்கு,

    கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட கதை இது; அதற்கு அன்பர் ஒருவர் எழுதிய மறுமொழியும் என் விளக்கமும் கீழே:

    நம்மை நாமே இழிந்து பேசுவது தவறு.. ஏன் நம் சமுதாயம் ஒன்றுபடாது? தேவதை மஇக கட்சி போலும்.. அதனாலேயே இன ஒற்றுமையை கண்டு தலைவர்களை போல அஞ்சி ஓடுகிறது… மறுமலர்ச்சிக்கு முயல வேண்டிய நாமே கேடுகெட்ட குட்டி கதைகளை உருவாக்கி ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கலாமா ??? நகைச்சுவைக்கு கூட இன ஒற்றுமைதான் கருவா???

    அருள்,
    யு. எஸ். ஏ

    நண்பருக்கு,

    அழுத்தமான இனவுணர்வு உடையவர் நீங்கள்; அதனாற்றான் இவ்வாறு எழுதியுள்ளீர்கள். உள்ளார்ந்த வாழ்த்துகள்.

    நம்மை நாம் ஆராய்ந்து பார்ப்பதும், குறையெனப் படுவனவற்றை இடித்துரைப்பதும் இழித்துப் பேசுவது ஆகா. பிறர் நம்மை இழித்தும் எள்ளியும் நகையாடும் நிலையைக் களைய முயலாமல் நம் `பெருமைகளை’ அல்லும் பகலும் மேடைதோறும் வாய்கிழிய முழங்குவதனாலும் பல்லாயிரம் பக்கம் எழுதிக் குவிப்பதனாலும் விளையும் பயனென்ன? நோயில் வாடுபவனுக்குத் தேவை மருந்தே ஒழிய போதை மாத்திரை அன்று.

    `நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு’ என்பார் திருவள்ளுவர். இடித்துச் சொல்வது நண்பனை இழிப்பதற்கன்று; நம் இனத்தை நாமே இடித்துரைப்பதுவும் அவ்வாறே ஆகும்.

    `ஏன் நம் சமுதாயம் ஒன்றுபடாது’ என்று கேட்கிறீர்கள். `நம் சமுதாயம் பல கூறுகளாகப் பிளவுண்டு கிடக்கிறதே, ஏன் ஒன்றுபடக்கூடாது’ என்பது இவன் உள்ளக்குமுறல். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

    இக்கதையில் நகைச்சுவை உண்டு; ஆயினும் இக்கதையைப் படித்து நகைப்பதற்கும் திரைப்படங்களில் வரும் சில காட்சிகளைப் பார்த்துச் சிரிப்பதற்கும் வேறுபாடு உண்டு. `சிரித்துச் சிந்திப்பதற்கும்’ சிரித்துக் களிப்பதற்கும்’ வேறுபாடு இல்லையா? `தேவர் அனையர் கயவர்’ என்பதிலும் நகைச்சுவை உண்டு. அது சிந்திப்பதற்கா, களிப்பதற்கா?

    உங்கள் கருத்து:

    //ந‌ம‌க்கு நாமே ந‌ம் ச‌முதாய‌ம் ஒற்றுமையின்றி உள்ள‌து என்று கூறிக்கொண்டால் எதாவ‌து ப‌ய‌ன் உண்டா?//

    இக்கேள்விக்கு விடை மேலே உள்ளது.

    //எந்த‌ ச‌முதாய‌ம் தான் எல்லா நேர‌த்திலும் எல்லா சூழ்நிலையிலும் ஒற்றுமையுட‌ன் இருந்துள்ள‌ன?//

    அதனால் நாம் பிளவுபட்டு நிற்பது சரி என்கிறீர்களா?

    //ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நாமும் பல‌ விச‌ய‌ங்க‌ளில் ஒற்றுமையுட‌ன் இருந்திருகிறோம்.//

    `ஒற்றுமையாக இருக்கக்கூடாது’ என்பதில்தான் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    இந்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் இனத்தில் விளைந்த ஒற்றுமை இன்மையையும் அதனால் உருவான கேடுகளையும் பிறர் கைகொட்டி எள்ளி நகையாடியதையும் படித்தும் கேட்டும் நேரில் பார்த்தும் நொறுங்கிப்போன நெஞ்சம் சொல்லும் கதை இது. அழத் தெம்பில்லை; சிரிக்க மட்டுமே முடிகிறது; என்ன செய்வது?

  4. 2009 November 5

    அன்பருக்கு,

    //வாய்விட்டு சிரித்தேன் அய்யா. வாழ்த்துக்கள்.//

    நன்றாகச் சிரியுங்கள்; சிரித்து முடித்ததும் சிந்தனை தோன்றும்.

  5. 2009 November 5

    தேவர் அனையர் கயவர்’

    அய்யா, இதற்கு விளக்கம் சொல்லுங்கள், எனக்கு சரியாக புரியவில்லை.

  6. 2009 November 5

    அன்பருக்கு,

    //தேவர் அனையர் கயவர்’

    அய்யா, இதற்கு விளக்கம் சொல்லுங்கள், எனக்கு சரியாக புரியவில்லை.//

    `தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
    மேவன செய்தொழுக லான்.’

    இது திருக்குறள் பாட்டு; அதிகாரம் 108 – கயமை; பாட்டு எண் – 3 (1073)

    தேவர்கள் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்வார்கள். கயவர்களும் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்வார்கள். எனவே கயவர்கள் தேவரை ஒத்தவர்கள்.

    கயவர்களைத் தேவரோடு திருவள்ளுவர் ஒப்பிடுவது அவர்களைப் புகழ்வதற்காக அன்று.

    புகழ்வதுபோல் இகழ்வது இது; இலக்கணத்தில் இதனை வஞ்சப் புகழ்ச்சியணி என்பர் ஆன்றோர்.

  7. 2009 November 5

    விளக்கத்திற்கு மிகவும் நன்றி அய்யா.

  8. 2009 November 5

    அன்பருக்கு,

    //விளக்கத்திற்கு மிகவும் நன்றி அய்யா.//

    வளர்க; வாழ்க.

  9. 2009 November 10
    trpattabiraman permalink

    நிறைவே காணும் மனம் வேண்டும்,இறைவா நீ அதை தர வேண்டும் என்றார் அகத்திய பெருமான்- யாராவது கேட்கிறீர்களா?-அனைவரின் மீதும் குறை கண்டு தன குறைகளை மறைத்து அல்லவா உலகில் வெறுப்பும் வேதனையையும் விதைத்து கொண்டு இருக்கிறார்கள்.
    பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே -அப்பகைவர் உள்ளத்திலும் நம் அன்புருவான பரமன் வாழ்கின்றான்- என்றான் பாரதி யாராவது காது கொடுத்து கேட்கிறீர்களா?-கூலி படை வைத்து அல்லவா ஆட்களை கொல்லுகிறீர்கள்.
    என்று சொல்லிக்கொண்டே போகலாம். முடிவில்லை
    உலகத்தை திருத்த முடியாது
    நாம்தான் திருந்த வேண்டும்
    மற்றவர்களும் நல்வழி நடக்க நாம் பிரார்த்தனை செய்வோம்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS