நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது; விடுதிக்குச் செல்லவேண்டும்.
“ஏன் தமிழகத்தில் இருக்கப் பிடிக்கவில்லை? சற்று விரைவாகச் சொல்! நேரம் ஆகிறது!" என்றேன்.
“சொல்கிறேன்; உம்மிடம் சுருட்டு இருக்கிறதா?”
“சுருட்டா? இல்லையே!”
“உம்மிடம் சுருட்டு இருக்காது என்று எனக்குத் தெரியும். ஒரு வெண்சுருட்டுக் கொடும்!”
“உனக்குப் புகைபிடிக்கும் பழக்கம்கூட இருக்கிறதா?” என்றபடி வெண்சுருட்டைக் கொடுத்தேன்.
பற்றவைத்துப் புகையை ஆழ இழுத்து வெளியே விட்டது கொள்ளிவாய்ப் பேய்.
“புகைபிடிக்கும் பழக்கம் உண்டு; ஆனால் அடிக்கடி புகைப்பதில்லை. சாப்பிட்ட பிறகு மட்டும் சுருட்டுப் பற்றவைப்பேன். அடிக்கடி இருமல் வருகிறது; உடல்நலமும் முன்போல இல்லை!”
“ஆமாம், முன்னரே சொன்னாய். உடல்நலத்துக்கு என்ன? அகவை கூடிவிட்டதனால் பிரச்சினையா?”
“என் உடல்நலத்துக்கும் அகவைக்கும் தொடர்பில்லை. பேய்களுக்கு அகவை கூடுவதில்லை!”
“உனக்கு அகவை ஆயிரம் ஆண்டுகள் என்று சொன்னாயே?”
“நான் பழைய பேய் என்று உமக்குத் தெரியவேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னேன். நான் இறந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இறக்கும்போது எனக்கு அகவை ஐம்பத்திரண்டு ஆண்டுகள். எனவே எப்போதும் எனக்கு அகவை ஐம்பத்திரண்டு ஆண்டுகளாகவே இருக்கும்!”
“அப்படி என்றால் உன் உடல்நலம் கெட்டதற்கு என்ன காரணம்?”
“சாப்பாடுதான்; சாப்பாடு கிடைப்பது இப்போது அரிதாக இருக்கிறது!”
“உன் சாப்பாடு என்ன?”
“பிணங்கள்! இடுகாட்டில் புதைக்கப்படும் பிணங்களைப் பிய்த்துத் தின்பேன்; நான் தமிழ்ப்பேயாக இருப்பதனால் தமிழ்ப்பிணங்களை மட்டும்தான் தின்பேன்! பிணங்கள் கிடைக்காமல் கடும்பசியில் இருக்கும் வேளைகளில் தமிழர்களை அறைந்து கொன்று தின்பதும் உண்டு!”
இவ்வளவு நேரம் என்னைவிட்டு விலகி இருந்த அச்சம் திடீரென மீண்டும் தோன்றியது. முகம் வெளிறியது; நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது; நள்ளிரவிலும் `குப்’பென்று வியர்த்தது.
“இப்போது உனக்குப் பசிக்கிறதா?” என்று மெல்லக் கேட்டேன்; நாக்கு அசைய மறுத்தது; பேச்சு வெளியே வர மறுத்தது.
என் முகத்தைப் பார்த்த அந்தப் பேய் `இடி இடி’ என்று சிரித்தது.
“அஞ்சாதீர்! வரும்போது சில பேய்களோடு சேர்ந்து இடுகாட்டில் வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன்; உம்மை ஒன்றும் செய்யமாட்டேன்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தது.
அந்தப் பேயை நம்பலாமா, கூடாதா என்று தெரியவில்லை. ஆனால் மீண்டும் ஓரளவு துணிவு திரும்பியது.
“இப்போது சாப்பாடு கிடைப்பது அரிதாக இருக்கிறது என்றாயே, ஏன்?”
“திருமணம் ஆகிய பின்னர் இறந்தால் எரிப்பதும் ஆகாமல் இறந்தால் புதைப்பதும் உங்கள் வழக்கம். சரிதானே?”
“சரி, சொல்!”
“வெள்ளையர் காலத்தில் இங்குத் தோட்டப்புறங்களில் இளமைச்சாவு மிகுதியாக இருந்தது. அப்போது மருத்துவ வசதிகள் குறைவு. பலவகையான நோய்கள், நச்சுக்கடிகள்; தமிழர்கள் செத்துக்கொண்டே இருந்தனர். இடர்மிகுந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் `கண்மூடிக் காதல்’ இளம்பிள்ளைகளிடையே அப்போது தலைவிரித்து ஆடியது. பதின்மூன்று, பதினான்கு வயதுப் பெண்பிள்ளைகளுக்கும் பதினேழு, பதினெட்டு வயதுப் பையன்களுக்கும் `காதல்’ வருவதும் வீட்டைவிட்டு ஓடிப்போவதும் அடிக்கடி நிகழ்ந்தது. அந்தப் பெண்பிள்ளைகளுள் பலர் நஞ்சருந்தினார்கள்; தூக்கிட்டுக்கொண்டார்கள். இவ்வாறு பல காரணங்களால் தமிழர் இடுகாட்டுக்கு அடிக்கடி `பிணவரவு’ இருந்தது; எங்களுக்குச் சாப்பாட்டுப் பிரச்சினை எழவில்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை!”
“ஏன்? என்ன ஆயிற்று?”
“உமக்குத் தெரியும். இப்போது இந்த நாடு எல்லாத் துறைகளிலும் வெகுவாக முன்னேறிவிட்டது. இளமைச் சாவுகள் மிகவும் குறைந்துவிட்டன. அதனால் தின்னுவதற்கு அடிக்கடி பிணங்கள் கிடைப்பதில்லை. ஆனால் தமிழர்கள் சிலர் அவ்வப்போது எங்களின் பசியைத் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!”
“நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை!”
“இந்த நாட்டு மக்கள் தொகையில் உங்கள் விழுக்காடு மிகச் சிறியது; ஆனால் குற்றச் செயல்களில் உங்கள் விழுக்காடு மிகப் பெரியது; இது உமக்குத் தெரிந்ததுதானே?”
“ஆமாம், தெரியும்!”
“குற்றச் செயல்களில் ஈடுபடும் தமிழ் இளைஞர்கள் தமிழர்களையே குறிவைத்துக் கொலை செய்கிறார்கள். அது மட்டும் அன்று; அவர்களுள் பலர் இளமையிலேயே செத்தும் போகிறார்கள்!”
“தெரியும்; மேலே சொல்!”
“இந்த நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களுள் தமிழர்கள்தாம் மிகுதி; சிறிய இனமாய் இருந்தாலும் தற்கொலையில் பிற இனங்களைவிட நீங்கள்தாம் கூடிய விழுக்காடு உடையவர்கள்!”
வாய்க்கொழுப்பு மிகுந்த அந்தப் பேயிடம் தொடர்ந்து பேசுவது கூடாது என்று முடிவுசெய்தேன்; எழுந்துகொண்டேன்.
“நேரம் ஆகிறது; நான் வருகிறேன்!” என்றேன்.
“இந்த நாட்டுக்கு ஏன் வந்தேன் என்று கேட்டீர்; உம் கேள்விக்கு நான் இன்னும் விடை சொல்லவில்லையே! சொல்கிறேன், கேட்டுவிட்டுப் போம்!”
(வளரும்)
- அ. நம்பி
நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தது கொள்ளிவாய்ப் பேய்; வாயிலிருந்து விட்டுவிட்டு வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது நெருப்பு.
ஏதும் பேசத் தோன்றவில்லை. `பேயின் சினம் தணியட்டும்’ என்று நினைத்து அமைதியாக இருந்தேன்.
கடிகாரத்தைப் பார்த்தேன்; நேரம் நள்ளிரவு மணி பன்னிரண்டை நெருங்கிக்கொண்டு இருந்தது.
அந்தப் பேயின் சினம் சற்றுக் குறைந்தாற்போல் தோன்றியது.
“உன் பிள்ளைகள் உன்னைக் கொன்று வயலில் புதைத்துவிட்டார்கள் என்று சொன்னாய். பிறகு என்ன ஆயிற்று?” என்று தணிந்த குரலில் கேட்டேன்.
“என்ன ஆயிற்றா? செத்துப்போனேன்! செத்துப்போய்ப் பேயானேன்! பேயாகித் தமிழ்நாடு முழுதும் அலைந்து திரிந்துகொண்டு இருந்தேன்!" என்று சொல்லியபடி மெல்லச் சிரித்தது; சிரிப்பில் ஆழமான கசப்புத் தெரிந்தது.
“ஆமாம், நீ செத்துப்போனது தஞ்சாவூரில்; பேயாகித் தமிழ்நாட்டில் திரிந்துகொண்டு இருந்ததாகச் சொல்கிறாய். ஆனால் இப்போது மலேசியாவில் இருக்கிறாயே, எப்படி?”
“உம் மூதாதையர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தாமே, நீர் எப்படி இப்போது இந்த நாட்டில் இருக்கிறீர்? சொல்லும்!”
“அதுவா? ஒரு காலத்தில் என் முன்னோர்கள் வேலை செய்வதற்காகவும் வணிகத்தை முன்னிட்டும் இந்த நாட்டுக்கு வந்தார்கள்.”
“பொய் பேசாதீர்! வீண்பெருமை எதற்கு? சோற்றுக்காக வந்தார்கள் என்று சொல்லும்!”
“நீதான் வீண்பேச்சுப் பேசுகிறாய்! எல்லாரையும் குறை சொல்வதுதான் உன் பழக்கம் என்று தெரிகிறது!”
“உண்மையைச் சொன்னால் உடல் எரியத்தான் செய்யும்! சரி, உமக்குக் கண்ணதாசனைத் தெரியுமா?”
“தெரியும்; கவியரசர் அவர்; அவர் பாடல்களில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு; நான் மிக மிக மதிக்கும் பாவலர் அவர். அவரோடு பழகியும் இருக்கிறேன்!”
“சரி, `சோறு போட முடியுமா உம்மால், சொல்லுக தமிழன் அங்கே வருவான்’ என்று கண்ணதாசன் பாடி இருக்கிறார்; தெரியுமா?”
தடுமாறிப்போனேன். அந்தப் பாடல் எனக்குத் தெரியும்; கவியரசரின் பாடல்களுள் பல எனக்கு மனப்பாடம். `அடிமடியிலேயே கை வைக்கிறதே, கவனமாக இருக்கவேண்டும்’ என்று நினைத்துப் பேசாமல் இருந்தேன்.
“அது மட்டுமா? `சோறு சோறு என்று வேறு நாடு ஏகித் துன்புறும் சோதரர்’ என்றும் பாடி இருக்கிறார். உண்மைக்கு மாறாகவா அவர் பாடி இருக்கிறார்? சொல்லும்!” என்று அழுத்திக் கேட்டது கொள்ளிவாய்ப் பேய்.
“அவர் பொதுவாகப் பாடினார். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மலாயா, பர்மா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்களைப்பற்றிப் பொதுவாகப் பாடினார்!”
“நிறுத்தும்! `பொதுவாக, பொதுவாக’ என்று நீட்டி முழக்கி உண்மையை மறைக்காதீர்! பல நாடுகளுக்கும் சென்ற தமிழர்களைப்பற்றிப் பாடினார் என்பது உண்மை; ஆனால் வரலாற்றைத் தெரிந்துகொண்டு பாடினார்; வரலாற்று உண்மையைப் பாடினார்!”
பேயறைந்தாற்போல் என் முகம் மாறியது. இலக்கியம், வரலாறு என்று பலவும் தெரிந்த ஒரு பேயிடம் நன்றாகச் சிக்கிக்கொண்டேன் என்பது தெரிந்தது; திகைத்துப்போனேன்.
“தமிழ்நாட்டில் இருந்த உம் மூதாதையர் சோம்பேறிகள்; `வேலை எளிதாக இருக்கவேண்டும்; ஆனால் வருமானம் நிறைய வரவேண்டும்’ என்று நினைத்துச் சோம்பல் வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். அந்த நேரம் பார்த்து மலாயாவில் இருந்து வெள்ளையர்களின் கையாள்களாக ஏமாற்றுக் கங்காணிகள் பலர் அங்குச் சென்றார்கள். ஆள்பிடிக்க ஊர்தோறும் அலைந்தார்கள். பொய்சொல்லி ஆள்பிடித்தார்கள்!”
ஏதாவது பேசியாக வேண்டுமே என்பதற்காக வெறுமனே "மேலே சொல்!” என்றேன்.
“மலாயாவில் கடுமையாக வேலை செய்ய வேண்டுவது இல்லை. சீனியைப் பரப்பிக் காயவைத்து இருப்பார்கள். காக்கைகள் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். உட்கார்ந்துகொண்டு காக்கைகளை விரட்டினால் போதும். திங்கள் முடிந்தவுடன் கைநிறையச் சம்பளம் கிடைக்கும். இப்படிப் பல பொய்களைச் சொன்னார்கள் அந்தக் கங்காணிகள். எளிமையாக வயிற்றை நிரப்புவதற்காகக் காத்துக்கொண்டு இருந்த உம் முன்னோர்கள் உடனே கப்பல் ஏறிவிட்டார்கள். எளிதாகக் காக்கை ஓட்டி எளிதாகச் சம்பளம் பெற்று எளிதாக வயிற்றில் சோற்றைத் திணித்து நிரப்பி எளிதாக நாளை ஓட்டலாம் என்பதற்காக இங்கு வந்தார்கள்! வாழ்வதற்காக வந்திருந்தால் இந்த நாட்டில் இன்று பிற இனங்களுக்கு ஈடாகச் சிறப்பாக வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள்! சோற்றுக்காக வந்ததால் இன்றும் சீரழிந்துகொண்டு இருக்கிறீர்கள்!”
“இதோ பார், நீ மிகுதியாகப் பேசுகிறாய்! பேச்சைக் குறைத்துக்கொள்! என் முன்னோர்கள் இங்கு ஏன் வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்று நான் உன்னைக் கேட்கவில்லை. நீ ஏன் இங்கு வந்தாய், எப்படி வந்தாய் என்றுதான் கேட்டேன்!”
“சரி, சொல்கிறேன் கேளும்! அங்கு இருக்கப் பிடிக்காமல் வெறுத்துப்போய்க் கப்பல் ஏறினேன்!”
(வளரும்)
- அ. நம்பி
வலப்பக்கம் திரும்பலாம்… ஆனால் திரும்பக்கூடாது!
முள்ளங்கிக்கும் கால் முளைக்கும்!
எங்கே செல்ல இந்தப் படிக்கட்டு?
பெண்ணறை (female room) வாடகைக்கு விடப்படும்!
ஓடிக் களைத்த குதிரை மட்டுந்தானா தண்ணீர் குடிக்கும்?
ஓட்டுநர் இன்றி ஓடும் மலேசியப் பொறியீருருளி (மோட்டார் சைக்கிள்)!
படங்கள்: மலேசிய நாளிதழில் (The Star) தேடி எடுக்கப்பட்டவை.
“என்ன? என்ன சொல்கிறாய்? உன் பிள்ளைகளே உன்னைக் கொன்றுவிட்டார்களா?” என்று உரக்கக் கேட்டேன்; மேன்மேலும் எனக்கு அதிர்ச்சி.
“ஆமாம். எனக்குப் பிள்ளைகள் நால்வர். ஆண்பிள்ளைகள் இருவர்; பெண்பிள்ளைகள் இருவர். பெண்பிள்ளைகளால் எனக்குப் பிரச்சினைகள் ஏதுமில்லை. ஆண்பிள்ளைகளே எனக்கு எமனாக ஆனார்கள்!” என்றது கொள்ளிவாய்ப் பேய். முகத்தில் துயரம் தெளிவாகத் தெரிந்தது.
“அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்வரை நல்ல பிள்ளைகளாகவே இருந்தார்கள். வளர்ந்த பின்னர்தான் பிரச்சினை தொடங்கியது. குடிக்கத் தொடங்கினார்கள். குடியோடு எல்லாக் கெட்ட பழக்கங்களும் சேர்ந்துகொண்டன. எந்நேரமும் குடியிலும் சூதிலும் பொழுதைக் கழித்தனர்; விலைமகளிர் வீடுகளே அவர்களுக்கு இருப்பிடம் ஆயின.”
“சொல்!”
“எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்பட்டது; கேட்கும்போது எல்லாம் கொடுத்துக்கொண்டே இருந்தேன். என் பேரைச் சொல்லி ஊர் முழுதும் கடன் வாங்கி இருந்தார்கள். அவற்றையும் திருப்பிக் கட்டிக்கொண்டிருந்தேன். எவ்வளவு காலம்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? பணம் கொடுக்க மறுத்தேன். பணம் கிடைக்காது என்று தெரிந்தவுடன் சொத்தைப் பிரிக்கச் சொல்லித் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்கள்!”
“என்ன சொத்து?”
“தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில்தான் நான் வாழ்ந்துவந்தேன். அங்கு எனக்கு நிலமும் வீடும் இருந்தன. சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை. ஆனால் தங்கள் பங்கைப் பெற்றவுடன் விற்றுப் பணமாக்கிச் செலவு செய்வதுதான் அவர்களின் திட்டம் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் திருந்தி நல்லவர்களான பின்னர் நிலத்தைப் பிரிக்கலாம் என்று நினைத்தேன்; சொத்தைப் பிரிக்க மறுத்துவிட்டேன். அவர்களைத் திருத்த முற்பட்டேன்!”
“பிறகு என்ன ஆயிற்று?”
"ஒரு நாள் பொழுது சாயும் நேரம்; வயலில் நடவுவேலை செய்த பெண்கள் எல்லாரும் வீடு திரும்பிவிட்டார்கள். நான் மட்டும் தனியாக வரப்பைத் திருத்திக்கொண்டிருந்தேன். என் பிள்ளைகள் வந்தார்கள்; ஏதும் பேசாமல் என் கையில் இருந்த மண்வெட்டியைப் பிடுங்கி என்னைத் தாக்கத் தொடங்கினான் மூத்தவன்; கையோடு கொண்டுவந்திருந்த அரிவாளால் என்னை வெட்டினான் இளையவன். என்னைக் கொன்றுவிட்டு நிலத்தை உரிமையாக்கிக் கொள்ளும் திட்டத்தோடுதான் வந்திருக்கிறார்கள் என்று விளங்கிவிட்டது. என்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றேன்; முடியவில்லை. ஓட முற்பட்டேன். விரட்டிப் பிடித்தார்கள். மூத்தவன் மண்வெட்டியால் என் தலையில் ஓங்கி வெட்டினான்; தலை பிளந்துகொண்டது. இளையவன் அரிவாளால் கழுத்தை வெட்டினான்; கழுத்திலிருந்து தலை தொங்கியது. கீழே விழுந்தேன்; செத்துப்போனேன். வயலிலேயே என்னைப் புதைத்தார்கள்; புதைத்த இடத்தில் நாற்றை நட்டுவிட்டுப் போய்விட்டார்கள்!”
சொல்லிவிட்டு அமைதியானது கொள்ளிவாய்ப் பேய்; பழைய நினைவுகளில் மூழ்கி வருந்துவதுபோல் தெரிந்தது.
அது பேயான கதையைக் கேட்டிருக்கக் கூடாது என்று நினைத்தேன்.
“தந்தையைக் கொல்லப் பிள்ளைகளால் எப்படி முடிந்தது என்று சிந்தித்துக்கொண்டு இருக்கிறீரா?" என்று கேட்டது பேய்.
“ஆமாம்; ஆனால் இப்போதும் அப்படி நடக்கிறது; நாளிதழ்களில் படித்திருக்கிறேன்.”
“தமிழினத்திற்கு இது புதியது அன்று; பண்பாடே அப்படித்தான். தந்தை, அண்ணன் என எந்த உறவு முறையையும் பார்க்காமல் தன்னலத்துக்காகப் பகைகொள்வதும் சண்டையிட்டுக்கொள்வதும் வெட்டிக்கொள்வதும் தமிழ்ப்பண்பாட்டின் ஒரு கூறு. ஒப்புக்கொள்கிறீரா?”
“உனக்கு ஏற்பட்ட நிலைக்கு உண்மையில் வருந்துகிறேன். ஆனால் அதற்காக ஓர் இனத்தையும் அதன் பண்பாட்டையும் குறைகூறுவது தவறு; நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!”
“கோப்பெருஞ்சோழரைத் தெரியுமா உமக்கு?”
“தெரியும். சங்ககாலத்தில் வாழ்ந்த சோழ மன்னர். ஏன் கேட்கிறாய்?”
“சங்ககாலம் என்பது தமிழர் வரலாற்றில் பொற்காலம் என்று மேடையேறித் தொண்டை கிழிய முழங்குகிறீர்கள்; ஏடெழுதிக் கிழிக்கிறீர்கள். பண்பாட்டின் உச்சியில் அப்போது தமிழன் வாழ்ந்தான் என்று பெருமை பேசுகிறீர்கள். கோப்பெருஞ்சோழர் எப்படி இறந்தார்? சொல்லும்!”
நான் மறுமொழி சொல்லவில்லை. சொன்னால் வம்பு.
“நீர் சொல்லமாட்டீர்; எனக்குத் தெரியும். நானே சொல்கிறேன். கோப்பெருஞ்சோழர் வடக்கிருந்து உயிர் நீத்தார். சரி, வடக்கிருத்தல் என்றால் என்ன? இதையாவது சொல்லும்!”
“உயிர்விடும் நோக்கத்தோடு வடக்குநோக்கி உண்ணாநோன்பு இருந்து உயிர்துறத்தல்!”
“கோப்பெருஞ்சோழர் ஏன் வடக்கிருந்தார்?”
மீண்டும் நான் அமைதியானேன்.
“கோப்பெருஞ்சோழருக்குப் பிள்ளைகள் இருவர்; அவரை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டுத் தாங்களே நாட்டை ஆள விரும்பினார்கள். தந்தையென்றும் பாராமல் அவரை எதிர்த்துப் படைதிரட்டி வந்தார்கள். பிள்ளைகளின் செயல் கண்டு மன்னர் உள்ளம் உடைந்துபோனார்; வடக்கிருந்து உயிர்துறந்தார். தந்தையார் உயிருடன் இருக்கும்போதே தாங்கள் நாடாள எண்ணுவதும் அவருடன் போரிட்டு வெல்ல முயல்வதும் என்ன பண்பாடு? அந்த இளவரசர்களுக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு இடைவெளி. ஆனால் அவர்களின் நடத்தையில் என்ன வேறுபாடு? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அதே பண்பாடுதான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என் காலத்திலும் இருந்தது; அதே பண்பாடுதான் இப்போதும் இருக்கிறது. இதுதான் அரிவாள் பண்பாடு. இதைத்தான் நீங்கள் வீரம் என்று வாய்கிழியப் பேசுகிறீர்கள்!”
சற்று நிறுத்தியது பேய்; பேச்சிலும் முகத்திலும் சினம் தெறித்தது.
“இந்த வீரம்தான் உங்கள் இலக்கியங்களில் இருக்கிறது; இதுதான் நாளிதழ்களில் வெளிவருகிறது. இதுதான் உங்கள் திரைப்படங்களில் இடம்பெறுகிறது. இதுதான் உங்கள் வீரம்! இதுதான் உங்கள் பண்பாடு!”
தீக்குச்சி இல்லாமலேயே அந்தக் கொள்ளிவாய்ப் பேயின் வாயிலிருந்து நெருப்பு வந்துகொண்டு இருந்தது.
(வளரும்)
- அ. நம்பி
